சீனா: போதை மருந்தால் வீழ்ந்த சாம்ராஜ்ஜியம் - ஒரு வரலாற்றுத் துரோகம்!

சுருக்கமாகச் சொன்னால்: இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி, சீனர்களின் அறிவை மழுங்கடித்து, பிரிட்டன் தனது தேநீர் கோப்பையை நிரப்பிக் கொண்டது.

Thu Nov 20, 2025

அபின் போரின் இருண்ட வரலாறு

"பிரிட்டிஷ் கப்பல்கள் மட்டுமல்ல. பல இந்திய வர்த்தகர்களும் இதில் ஈடுபட்டனர். குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த பார்சி (Parsi) மற்றும் மார்வாடி சமூகத்தினர் ஆவர். அவர்களில் முக்கியமானவர்கள் டாட்டா (Tata) மற்றும் ஜீஜீபாய் (Jeejeebhoy) குடும்பத்தினர். பார்சி இனத்தவரான டாட்டா குடும்பத்தினர் இப்படித்தான் செல்வம் கொழிக்கத் தொடங்கினார்கள். 

"ஒரு தேசத்தை அழிக்க, அதன் எல்லைகளில் பீரங்கிகளை நிறுத்தத் தேவையில்லை; அணுகுண்டுகள் வீசத் தேவையில்லை. அதன் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கினால் போதும்."

வரலாற்றில் இந்தக் கொடூரமான உத்தியை மிகத் துல்லியமாக, மிக மிகக் கொடூரமாக அரங்கேற்றியது யார் தெரியுமா? அது தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம். பாதிக்கப்பட்ட நாடு: சீனா. பயன்படுத்தப்பட்ட ஆயுதம்: அபின் (Opium). அந்த ஆயுதம் விளைவிக்கப்பட்ட இடம்: நமது இந்தியா.

இன்று நாம் பேசப்போவது, சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானம்’ (Century of Humiliation) பற்றியும், அதில் இந்தியாவின் ரத்தமும், இந்தியத் தொழிலதிபர்களின் (டாட்டா உட்பட) மறைக்கப்பட்ட பங்கும் பற்றிய ஒரு கசப்பான வரலாற்றைத்தான்.

18-ம் நூற்றாண்டில், சீனா உலகப் பொருளாதாரத்தின் ஒரு தனித்தீவு போல இருந்தது. சீனப் பேரரசர்கள், "எங்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களிடமே உள்ளன. காட்டுமிராண்டிகளான வெளிநாட்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை" என்ற கர்வத்துடன் தங்கள் வணிகக் கதவுகளை மூடி வைத்திருந்தனர்.

ஆனால், பிரிட்டனுக்குச் சீனா தேவைப்பட்டது. ஏன்? தேயிலை (Tea). இங்கிலாந்து மக்களுக்குத் தேயிலை ஒரு வெறியாகவே மாறியிருந்தது. அவர்கள் சீனாவிலிருந்து டன் கணக்கில் தேயிலையையும், பட்டுத் துணிகளையும், பீங்கான் பாத்திரங்களையும் இறக்குமதி செய்தனர்.

இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. பிரிட்டன், சீனாவிடமிருந்து பொருட்களை வாங்கியது. ஆனால், சீனா பிரிட்டனிடமிருந்து எதையும் வாங்க மறுத்தது.

"உங்கள் கம்பளித் துணிகள் எங்களுக்கு வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள்.

இதனால், பிரிட்டன் தன்னிடம் இருந்த வெள்ளி மற்றும் தங்கத்தைக் கொடுத்துத் தேயிலையை வாங்க வேண்டியிருந்தது. இதனால், பிரிட்டனின் கஜானா காலியானது. இதை ’வர்த்தகப் பற்றாக்குறை’ (Trade Deficit) என்பார்கள். இதைச் சரிசெய்ய பிரிட்டன் ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்டியது.

"சீனர்களிடம் விற்பதற்கு நம்மிடம் ஒரு பொருள் வேண்டும். அவர்கள் மறுக்கவே முடியாத ஒரு பொருள் வேண்டும்."

என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள். அந்தப் பொருள்தான் அபின் (Opium).

அபின் என்பது ஒரு போதைப் பொருள். இது பாப்பி (Poppy) செடியிலிருந்து கிடைக்கிறது. இதை விளைவிக்கச் சிறந்த இடம் எது? அவர்கள் தேர்ந்தெடுத்தது பிரிட்டனின் காலனியாக இருந்த இந்தியாவைத் தான்.

கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியாவின் வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் இருந்த ஏழை விவசாயிகளை மிரட்டியது.

"நீங்கள் நெல் பயிரிடக்கூடாது; கோதுமையை விளைவிக்கக் கூடாது. அபின் மட்டுமே பயிரிட வேண்டும்."

விவசாயிகள் மறுத்தால், அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. உணவு விளைவிக்க வேண்டிய நிலங்களில், விஷம் விளைவிக்கப்பட்டது.

பிரிட்டன், இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி அபினை விளைவித்தது.

அந்த அபினை, சீனாவிற்குக் கடத்திச் சென்று விற்று, அதற்குப் பதிலாகச் சீனர்களிடமிருந்து வெள்ளி நாணயங்களைப் பெற்றது. அந்த வெள்ளியைக் கொண்டு, சீனாவிலிருந்து தேயிலையை வாங்கி, அதை இங்கிலாந்துக்கு அனுப்பியது.

சுருக்கமாகச் சொன்னால்: இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி, சீனர்களின் அறிவை மழுங்கடித்து, பிரிட்டன் தனது தேநீர் கோப்பையை நிரப்பிக் கொண்டது.

பிரிட்டன், அபினை நேரடியாகச் சீனாவிடம் விற்கவில்லை. ஏனென்றால் சீனாவில் அபின் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கடத்தல்காரர்கள் மூலம் இதைச் சந்தைப்படுத்தினார்கள்.

ஆரம்பத்தில் மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்ட அபின், விரைவில் ஒரு பழக்கமாகி, பின்னர் ஒரு வெறியாக மாறத் தொடங்கியது. 1830-களில், சீனாவின் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மாணவர்கள், சாதாரணக் கூலிகள் எனச் சுமார் 1.2 கோடி சீனர்கள் அபினிக்கு அடிமையாகியிருந்தார்கள்.

அபின் போதையால் சீனச் சமூகம் சீரழியத் தொடங்கியது. குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. சீனாவின் வெள்ளிப் பணம் முழுவதும் பிரிட்டனுக்குப் பாய்ந்தது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம், புகைப்பிடிக்கும் குழாய்களுக்கு முன்னால் மயங்கிக் கிடந்தது.

சீனப் பேரரசர் இதைக் கண்டு கொதித்தெழுந்தார். அவர் லின் ஜெக்சு (Lin Zexu) என்ற ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்தார். லின் ஜெக்சு, 1839-ல், பிரிட்டிஷ் வியாபாரிகளிடமிருந்த 20,000 பெட்டி அபினைக் கைப்பற்றி, அதைக் கடலில் கரைத்து அழித்தார்.

விக்டோரியா மகாராணிக்கு, "எங்கள் மக்களை அழிக்கும் இந்த விஷத்தை ஏன் விற்கிறீர்கள்?" என்று ஒரு கடிதமும் எழுதினார். பதிலுக்கு பிரிட்டன் என்ன செய்தது? மன்னிப்பு கேட்டதா? இல்லை.

"எங்கள் சொத்துக்களை (அபினை) அழித்துவிட்டீர்கள்! தடையற்ற வர்த்தகத்தைத் தடுத்துவிட்டீர்கள்!" என்று கூறி, பிரிட்டன் தனது நவீனக் கடற்படையைச் சீனாவுக்கு அனுப்பியது.

சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் போர் தொடங்கியது. இதுவே முதல் அபினிப் போர் (1839-1842).

பழைய வாள்களையும், ஈட்டிகளையும் வைத்திருந்த சீன ராணுவம், பிரிட்டனின் நவீனப் பீரங்கிக் கப்பல்களை எதிர்க்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. சீனா சரணடைந்தது. அவமானகரமான ’நான்கிங் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது.

அந்த ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டது என்று தெரியுமா?

* சீனா, பிரிட்டனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

* சீனத் துறைமுகங்கள் பிரிட்டனுக்குத் திறக்கப்பட வேண்டும்.

* மிக முக்கியமாக, ஹாங்காங் (Hong Kong) தீவு, பிரிட்டனுக்குச் சொந்தமாக்கப்பட்டது.

இதுதான் சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானத்தின்’ (Century of Humiliation) தொடக்கம்.

இப்போது, இந்தக் கதையின் இந்தியப் பக்கத்திற்கு வருவோம். பிரிட்டன் அபினை விளைவித்தது சரி, அதைச் சீனாவுக்குக் கொண்டு சென்று விற்றது யார்?

பிரிட்டிஷ் கப்பல்கள் மட்டுமல்ல. பல இந்திய வர்த்தகர்களும் இதில் ஈடுபட்டனர். குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த பார்சி (Parsi) மற்றும் மார்வாடி சமூகத்தினர் ஆவர். அவர்களில் முக்கியமானவர்கள் டாட்டா (Tata) மற்றும் ஜீஜீபாய் (Jeejeebhoy) குடும்பத்தினர். பார்சி இனத்தவரான டாட்டா குடும்பத்தினர் இப்படித்தான் செல்வம் கொழிக்கத் தொடங்கினார்கள்.

ஜாம்செட்ஜி டாட்டா (Jamsetji Tata): நவீன இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். இவரது தந்தை நுஸர்வான்ஜி டாட்டா மற்றும் ஜாம்செட்ஜி டாட்டா ஆகியோர், தங்கள் ஆரம்பகால மூலதனத்தை, சீனாவுடனான அபின் வர்த்தகத்தில்தான் ஈட்டினார்கள்.

அவர்கள் குஜராத் மற்றும் மால்வா பகுதிகளில் விளைந்த அபினை, கப்பல்களில் ஏற்றிச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தனர். "டாட்டா அண்ட் கோ" என்ற பெயரில் ஷாங்காய் நகரில் கிளை அலுவலகம் கூடத் திறக்கப்பட்டது.

இந்த அபின் வர்த்தகத்தில் கிடைத்த அந்த அபரிமிதமான லாபம்தான், பின்னாளில் இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலை (Tata Steel), தாஜ் ஹோட்டல், மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்கான மூலதனமாக (Capital) மாறியது.

மும்பை நகரம் இன்று ஒரு பிரம்மாண்டமான வர்த்தக மையமாக இருப்பதற்கு, அன்று சீனாவில் விற்கப்பட்ட அபினின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாத, கசப்பான உண்மை. டாட்டா மட்டுமல்ல, பல பார்சி மற்றும் மார்வாடி வர்த்தகக் குடும்பங்கள் இந்த வழியில் தான் வளர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சீனா ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறது? ஏன் தைவான் விஷயத்திலும், தென் சீனக் கடலிலும் பிடிவாதமாக இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள, நாம் இந்த வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

சீனப் பள்ளிகளில் இன்றும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படும் முதல் பாடம் எது தெரியுமா:

’நூற்றாண்டு அவமானம்’. ’நாம் பலவீனமாக இருந்தோம்; அதனால் போதை மருந்து கொடுத்து நம்மை அழித்தார்கள். நம் நிலங்களைப் பறித்தார்கள். இனி ஒருபோதும் சீனா அப்படி ஏமாறக்கூடாது. இனி ஒருபோதும் சீனா பலவீனமாக இருக்கக்கூடாது.’

ஜி ஜின்பிங் பேசும், "சீனக் கனவு" (Chinese Dream) என்பது, இந்த 150 ஆண்டுகால அவமானத்தைத் துடைத்து, மீண்டும் உலகத்தின் உச்சிக்குச் செல்வதுதான்.

வரலாறு விசித்திரமானது.

அன்று இந்தியா விளைவித்த அபின், சீனாவை அழித்தது.

அன்று ஈட்டிய லாபம், இந்தியாவின் நவீனத் தொழில்துறைக்கு அடித்தளமிட்டது.

அன்று அவமானப்பட்ட சீனா, இன்று அந்த வடுக்களைச் சரிசெய்ய, உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

"வரலாற்றை மறப்பவர்கள், அதை மீண்டும் வாழச் சபிக்கப்படுவார்கள்" என்பதுதான் உண்மை.

இது சீனாவிற்கு மட்டுமல்ல, தமிழ் இனத்துக்கும் பொருந்தும்.

"வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் மிகக் கடுமானது; ஓர் இனத்தை வேரறுக்கப் பெரும் போர் தேவையில்லை; போதை ஒன்றே போதும்" என்பது சீன வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். அன்று சீனா அபின் புகையில் சரிந்தது; இன்று நம் தமிழ்நாடு கஞ்சா புகையிலும், டாஸ்மாக் மதுவின் பிடியிலும் சிக்கித் தள்ளாடுகிறது.

எனக்கு 35 வயது ஆகிறது. ஆனால், இப்போது சீரழிந்ததைப் போல போதையில் தள்ளாடும் தமிழ்நாட்டை நான் பார்த்ததில்லை. கஞ்சா எளிதாகக் கிடைக்கிறது. கார்ப்பரேட் பார்ட்டிகள் எதுவும் கஞ்சா இல்லாமல் நடைபெறுவது இல்லை. பள்ளிக்கூடங்கள் முன்பு கூட கஞ்சா புழங்கத் தொடங்கிவிட்டது குறிப்பிடத் தொடங்கிவிட்டது.

அன்று சீனாவைச் சீரழிக்க பிரிட்டிஷ் எனும் அந்நிய சக்தி இருந்தது. ஆனால் இன்று? நம் சொந்த மண்ணிலேயே, நம் வருங்காலத் தலைமுறையானது, கல்வி கற்க வேண்டிய வயதில் போதைக்கு அடிமையாகி, சிந்தனை மழுங்கி வீதியில் திரிகிறது. அன்று குடித்தாலே பாவம், தவறு என்று யாருக்கும் தெரியாமல் மறைத்துக் குடித்தார்கள். ஆனால், இன்று மீசை முளைப்பதற்கு முன்பே சாலையோரங்களில் அமர்ந்து குடித்துக் களிக்கிறார்கள் நமது விடலைகள்.

நூற்றாண்டு கால அவமானத்திலிருந்து சீனா மீண்டு, இன்று வல்லரசாகிவிட்டது. ஆனால், உலகம் போற்றும் அறிவுச் சமூகமாகத் திகழ்ந்த தமிழினம், இன்று தன் இளைய தலைமுறையைப் போதைக்குப் பலிகொடுத்துவிட்டு, மீள முடியாத இருளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உலகிற்கே வணிகத்தையும், அறத்தையும் கற்றுக்கொடுத்த ஓர் அறிவுச்சமூகம், இன்று போதைப்பிடியில் சிக்கித் தன் சுயத்தை இழந்து நிற்பது தான் காலத்தின் கோலம்.

அன்று பிரிட்டிஷார் அபினைக் கொண்டு சீனாவை அழித்தார்கள். ஆனால், இன்று கழக அரசுகளே நமது மக்களை கஞ்சா மயக்கத்திலும், மது போதையிலும் தள்ளி வேரறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

'நம் பிள்ளைகளுக்குப் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைப்பதை விட, போதையில்லாத தெளிவான புத்தியையும், சுயமரியாதையையும் சேர்த்து வைப்பதே மிகச் சிறந்த சொத்து. இல்லையேல், நாளைய வரலாறு நம்மை 'வீரத் தமிழினம்' என்று எழுதாது; 'மது மயக்கத்தில் வீழ்ந்த இனம்' என்றே பதிவு செய்யும்!'

விழித்துக்கொள் தமிழா! 🔥🩸

#ChinaHistory #OpiumWars #TataHistory #IndiaChina #HistoryFacts #BritishEmpire #Colonialism #TamilPost

Writer Vetrivel C
Author of Venvel Senni & Vaanavali